காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி…

அன்று 1985ம் ஆண்டு மார்ச் மாதம் 7ந் திகதி. தாயகத்தில் அமைதியாக இருந்த குளங்களிலெல்லாம் கல்லெறியப் பட்டு விட்ட காலம் அது.

எங்கள் வீடும் அப்போது கல்லெறியப்பட்ட குளமாய்த்தான் இருந்தது. இருந்தாலும் எங்கள் குட்டித் தங்கை பாமாவின் 13 ஆவது பிறந்த நாளை, அதாவது ரீன்ஏஜ் இல் காலடி எடுத்து வைக்கும் அவளின் பிறந்தநாளைக் கொண்டாடாமல் இருக்க அக்காமாரான எங்களுக்கு மனம் இடந் தரவில்லை. பெரிய கேக் ஒன்று அடித்து, நண்பி இந்துமதியிடம் கொடுத்து பேக் பண்ணினோம். எங்களிடம் அப்போது மின்சாரச்சூளை இருக்கவில்லை.

அந்தக் கேக்குடன் அம்மா செய்த வடை, முறுக்கு, இதர சிற்றுண்டிகளையும் வழக்கமான சாப்பாட்டு மேசையை விடுத்து வரவேற்பறையில் இருக்கும் மேசையில் வைத்து விட்டு அந்த மேசையைச் சுற்றி இருந்தோம்.

ஆனால் யாருமே எதையுமே சாப்பிடவில்லை. என் சின்னக் குழந்தைகள் கூட எதற்குமாய் அடம் பிடிக்கவில்லை. என்னையும் என் தங்கைமாரையும் போலவே அவர்களும் யாரையோ எதிர் பார்த்துக் காத்திருந்தார்கள்.

அந்த எதிர்பார்ப்புக்குரியவர் வேறு யாருமல்ல. எங்கள் தம்பி மொறிஸ்தான் அது. தம்பி மயூரனுக்கும்(சபா) தங்கை பாமாவுக்கும் மட்டும் அவன் அண்ணா. என் பிள்ளைகளுக்கோ குறும்பு நிறைந்த ஆசை மாமா.

காத்திருந்த கணங்கள் யுகங்களாக நீண்டிருக்க, மணிகள் சில கடந்து அவன் வந்தான். தோளிலே துணிப்பை கிரனைட்டுகளுடன் பருமனாகத் தொங்க, கையிலே இன்னொரு கிரனைட்டைப் பொத்தியபடி, முகத்திலே மட்டும் என்றுமே மாறாத புன்னகையுடன் வந்த அவனது வாய் ஒரு பாடலை முணுமுணுத்தது.

அவன் எங்களை நெருங்க நெருங்க “காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி. பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி…“ என்ற பாடல்வரிகள் தெளிவாக எம் காதுகளையும் வந்தடைந்தன.

எமது காத்திருப்புக்குத்தான் ஏதோ சொல்ல வருகிறான் என நாம் நினைத்தோம். ஆனால் அவனோ “அக்கா.. அத்தான் யேர்மனியிலை இருந்து உங்களையே நினைச்சு நினைச்சு ‘காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி…‘ எண்டு பாடிக் கொண்டிருக்கிறார்“ என்றான். அப்போது எனது கணவர் யேர்மனிக்குப் பயணித்து சில மாதங்கள்தான் ஓடியிருந்தன.

“ம்..ம்..ம்… உனக்கு இஞ்சை மட்டும் அவர் பாடுறது கேட்குதாக்கும். சும்மா போடா..! நான் அவனைச் செல்லமாகக் கடிந்து கொண்டேன்.

“எனக்குத் தெரியாதே?“ என்ற படி தொடர்ந்து பாடலைப் பாடிக் கொண்டே அவன் என் பிள்ளைகளை நோக்கினான்.

என் மகள் தீபா ஓடிப்போய் “பரதன் மாமா..“ என்ற படி அவனைக் கட்டிப் பிடித்தாள். கிரனைட் பொத்திய கைகளுடன் அவன் அவளை அணைத்தான்.

“ஐயோ.. அவளை விடடா. முதல்லை உதெல்லாத்தையும் அங்காலை கொண்டு போய் வைச்சிட்டு வந்து பிள்ளையளைக் கொஞ்சு“ மனசு பதை பதைக்க அவனைக் கடிந்தேன்.

“அக்கா, உங்களுக்கு எப்பவும் பயம்தான்“ என்ற படி தள்ளிப் போனவன், “இந்தக் கிரனைட் கிளிப் உடைஞ்சிட்டுது. தலைக்குக் குத்துற கிளிப் ஒண்டு தாங்கோ. இதைச் சரிப்படுத்த…“ என்றான்.

உடனே தங்கை சந்திரா “உனக்கு இப்ப என்ன கிளிப் தானே வேணும். இஞ்சை வா. நான் தாறன்“ என்று கூறி விறாந்தைகள் கடந்து குசினிக்குப் பக்கத்திலுள்ள ஸ்டோர் றூமுக்கு அவனை அழைத்துச் சென்றாள்.

அது ஒரு இரட்டை அறை. ஒரு அறைக்குள் போனால் சேர்ந்திருக்கும் இன்னொரு அறைக்குள்ளும் போகலாம். அந்த இன்னொரு அறைக்குள் மா, சீனி, அரிசி, புளி, ஒடியல், ஊறுகாய்… என்று மூட்டைகளும், பானைகளும், சாடிகளும் நிறைந்திருக்க முன் அறையில் அம்மா அவ்வப்போது சமையற் தேவைக்கு எடுக்கக் கூடிய வகையில் சிறிய சாடிகளிலும் போத்தல்களிலும் உணவுப் பொருட்கள் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. கூடவே சாப்பாட்டுக் கோப்பைகள் குடிகோப்பைகள் ரம்ளர்களுடனான ஒரு அலுமாரியும் ஒரு பெரிய மேசையும் இருந்தன.

சந்திரா, அந்த மேசைக்குத்தான் மொறிஸைக் கூட்டிச் சென்றாள். நானும் அவர்களின் பின்னாலே போய்ப் பார்த்து “கெதியா கிளிப்பைப் போட்டிட்டு வாங்கோ. இனியாவது பிறந்தநாளைக் கொண்டாடுவம்“ என்று சொல்லி விட்டு வரவேற்பறைக்கு வந்து காத்திருந்தேன்.

ஐந்து நிமிடங்கள் தான் அசைந்து போயிருக்கும். ஒரு மாபெரும் சத்தம். வீடு அதிர்ந்தது. எனக்கு நெஞ்சே வெடித்தது போலிருந்தது. என் பிள்ளைகள் விழிகள் பிதுங்க விறைத்து நின்றார்கள்.

நல்ல வேளையாக அம்மா அந்த நேரம் வீட்டில் நிற்கவில்லை. நின்றிருந்தால் கதிகலங்கிப் போயிருப்பா. நானும் மற்றைய தங்கை பிரபாவும் பாமாவும் ஸ்டோர் றூம் வாசலையே பார்த்தபடி நின்றோம். ஸ்டோர்றூமுக்குள்ளிருந்து புகை வந்து கொண்டிருந்தது. ஸ்டோர்றூம் வாசல் புகை மண்டலமாயிருந்தது. வாசலிலிருந்து நீளத்துக்கு விறாந்தையிலிருந்து முற்றம் வரை துகள்களாய் சிவப்பாய், கறுப்பாய் பலநிறங்களில் ஏதேதோ வந்து விழுந்தன. வேறு எந்தச் சத்தமும் இல்லை.

உள்ளே, தம்பி மொறிசும் தங்கை சந்திராவும் என்ன ஆனார்கள்? சிதறி விட்டார்களா? ஒரு கணம் இதயம் துடிக்க மறந்து செயலிழந்து நின்றேன். அடுத்த கணம் எப்படி வரப்போகிறது என்று தெரியாத அந்தக் கணத்தில்தான் அந்த அதிசயம் நடந்தது. வாழ்க்கையில் மறக்கவே முடியாத கணங்களில் ஒரு கணம் அது.

தங்கை சந்திராவும் தம்பி மொறிசும் உயிரோடு வெளியே வந்தார்கள். அப்போதும் அவன் „காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி…“ என்று பாடிக் கொண்டே வந்தான். முகத்தில் எப்போதும் போலப் புன்னகை பூத்திருந்தது.

தங்கைதான் வெலவெலத்துப் போயிருந்தாள். “அக்கா எனக்குக் காது கேட்கேல்லை. செவிடாகீட்டன் போலை இருக்கு“ என்றாள். எனக்குப் போன உயிர் திரும்பி வந்தது போலிருந்தது.

ஆனால் அதற்கு மேல் எம்மால் அந்தப் பிறந்தநாளைச் சாதாரணமாகக் கொண்டாடவே முடியவில்லை. பயம், பதட்டம், சந்தோஷம்… என்று எல்லாம் கலந்த இனம் புரியாத உணர்ச்சிக் கலவை எம்மை ஆட்கொள்ள நாம் சில நிமிடங்கள் வாய் விட்டுச் சிரித்தோம். பின்னர் அழுதோம். தம்பி மொறிஸைக் கட்டித் தழுவினோம். அதன் பின்னர்தான் ‘உள்ளே என்ன நடந்தது?‘ என்பதை அறிந்து கொண்டோம்.

நடந்தது இதுதான். கிளிப் போடும் போது, மொறிஸின் கை நழுவி கிரனைட் வெடித்து விட்டது. கிரனைட் வெடிக்கப் போவதைக் கணத்தில் உணர்ந்து கொண்டவன், தங்கையையும் இழுத்துக் கொண்டு ஓடிப்போய் மற்ற அறையின் அரிசி மூட்டைகளின் பின் படுத்து விட்டான். அந்த அரிசி மூட்டைகள்தான் அன்று அவர்கள் இருவரையும் காத்தன.

அதன் பின் அதற்கான தண்டனையாக, மொறிஸ், ஆயிரம் தோப்புக்கரணம் போட்டது இன்னுமொரு கதை.

சந்திரவதனா
12.10.2001

  • ஐபிசி தமிழ் (2001)
  • Facebook (25.11.2023)

About சந்திரவதனா செல்வகுமாரன்

View all posts by சந்திரவதனா செல்வகுமாரன் →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *