ஆண்-பெண் நட்பு

இன்று ஐரோப்பியாவில் இது பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான ஒரு போராட்டமென்று சொல்லலாம். முக்கியமாகப் பெண்பிள்ளைகள்.

இவர்கள் கலாச்சாரம், பண்பாடு என்ற இரு விடயங்களால் பெற்றோருடனும் ஒட்ட முடியாமல், ஐரோப்பிய வாழ்க்கையுடனும் ஒட்டமுடியாமல் ஒருவித மனஉளைச்சலுடன் வாழ்கிறார்கள்.

இதே நேரம், பிள்ளைகள் பால்வேற்றுமையின்றி நட்புடன் பழகுவதை, நட்பு என்ற கண்கொண்டு பார்க்காமல் ´எங்கே பிள்ளைகள் தவறிவிடுவார்களோ.!´ என்று அச்சப்பட்டு, அச்சப்பட்டே, பெற்றோர்களும் தமக்குத் தாமே மனஉளைச்சலை ஏற்படுத்திக் கொண்டு வாழ்கிறார்கள்.

இது தப்பு என்பதுதான் எனது கருத்து.

நான்குசுவர்களுக்குள் வளர்க்கப்படும் பிள்ளைகள் காதல் வலையில் விழவில்லையா? தவறுகள் அங்கு நடக்கவில்லையா? என்பதைப் பெற்றோர் நன்றாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ‘வீட்டுக்குள் வளர்க்கப்படும் பெண்பிள்ளைகள், வெளி உலகத்தை நன்கு தெரியாமல் வளர்கின்ற போதுதான் தவறுகள் கூடுதலாக அரங்கேறுகின்றன’ என்பதை, ஏனோ பெற்றோர்கள் சிந்திக்க மறந்து விடுகிறார்கள்.

உதாரணமாக, வீடு மட்டுமே உலகமாக்கப்பட்டு வளரும் பெண்பிள்ளைகள் வீட்டுக்கு வந்து போகும் அண்ணனின் நண்பனையோ அல்லது பக்கத்து வீட்டு யன்னலில் தெரியும் வாலிபனையோ காதலிக்கத் தொடங்கி விடுகிறார்கள்.

இதிலிருந்தாவது, பிள்ளைகளைக் கட்டி வைப்பதால் அவர்கள் மனதையோ, உணர்வுகளையோ கட்டி வைக்க முடியாது என்பதைப் பெற்றோர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அத்தோடு இப்படி வளர்க்கப்படும் பெண் பிள்ளைகள் உலகத்தைக் காணத் தவறி விடுகிறார்கள். மனிதர்களின் நியமான குணங்களைப் புரிந்துகொள்ள முடியாமற் போய்விடுகிறார்கள். தமது வட்டத்துக்குள் தாம் சந்திக்கும் யாராவது ஒரு ஆண் மகனை (அவன் அண்ணனின் நண்பனோ அல்லது பக்கத்து வீட்டு யன்னலில் தெரிபவனாகவோ இருக்கலாம்) அவன் நல்லவனா, கெட்டவனா, தனக்குப் பொருத்தமானவனா என்று தெரியாமலே கண்மூடித்தனமாய் காதலிக்கத் தொடங்கி விடுகிறார்கள். எந்தவித முன்யோசனையும் இன்றி கல்யாணத்துக்குத் தயாராகியும் விடுகிறார்கள்.

ஆனால் வெளியில் போய் ஆண், பெண் என்ற பேதமின்றி எல்வோருடனும் நட்புடன் பழகும் ஒரு பெண், யாராவது ஒருவனைக் கண்டவுடன் காதலிக்க மாட்டாள். நட்புடன்தான் பழகுவாள்.

இப்படிப் பலருடன் நட்புடன் பழகும் போது யாராவது ஒருவரின் குணஇயல்புகள், பழக்கவழக்கங்கள் அவளுக்குப் பிடிக்கும் போது,  அங்கு அது காதலாகவும் மலரலாம். இந்தக் காதல் தப்பு என்று கருத வேண்டிய அவசியமில்லை. இந்தக் காதல் ஒரு வகையில் நல்லதும் கூட. ஒருவரை யொருவர் ஓரளவு முதலே தெரிந்து கொண்ட இவர்களின் மணவாழ்வு பெரும்பாலும் புரிந்துணர்வும் ஒற்றுமையும் மிகுந்ததாகவே இருக்கும்.

“எங்கடை பெடியள் சரியில்லை”

இது பெண்ணைப் பெற்றவர்கள் பலரின் வாய்ப்பாடமும் மனக்கருத்தும். இது மிகமிகத் தப்பானதொரு கருத்து. ஆண்கள் கெட்டவர்கள், பெண்கள் நல்லவர்கள் என்றில்லை.

நல்லவர்களும் கெட்டவர்களும் இரு பகுதிகளிலும் உள்ளார்கள். அந்தக் கெட்டவர்கள் ஏன் உருவானார்கள் என்பதைத்தான் நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

இங்கு நாம் எடுத்துக் கொண்ட விடயத்துடன் பார்த்தால், ஆண் – பெண் என்ற பாகுபாடின்றி வளரும் போது, பெண் பிள்ளைகளுடன் கதைப்பதை ஒரு சாதனையாக, ஆண்பிள்ளைகள் கருதவே மாட்டார்கள். கதைப்பதற்கென்றே அலையவும் மாட்டார்கள்.

எமது வாழ்க்கை முறையின் தவறினால்தான் இந்தத் தப்புகள் எல்லாம்.

சின்னவயதிலிருந்தே பால் பாகுபாடின்றி ஒன்றாக நட்புடன் வளரும் பிள்ளைகளின் மத்தியில் ஏற்படும் தவறுகளை விட “நீ ஆண், நீ பெண்” என்று பிரித்து, தனிமைப் படுத்தப்பட்டு வளர்க்கப்படும் பிள்ளைகளின் மத்தியில்தான் தவறுகள் அதிகமாக ஏற்படுகின்றன.

12, 13 வயதுகளின் பின், ஒரு பெண்பிள்ளைக்கு பெண் நண்பிகளைத் தவிர வேறு ஆண் நண்பர்களே இல்லாத போது, யாராவது ஒரு ஆணுடன் பழகும் வாய்ப்பு ஏற்பட்டால் போதும். உடனேயே அவளுக்கு அவனில் காதல் வந்து விடுகிறது.

இப்படியான காதலின் போது, இவனுடனான என் வாழ்வு இனிமையாக அமையுமா? இவன் போக்கும் என் போக்கும் பொருந்திப் போகுமா..? என்பது போன்றதான பல விடயங்களைச் சிந்தித்துப் பார்க்கும் மனப் பக்குவம் அந்தப் பெண்பிள்ளைக்கு இல்லாது போய் விடுகிறது. இதே போலத்தான் ஆண் பிள்ளைகளின் நிலையும்.

ஆனால் ஆண் – பெண் என்ற பாகுபாடின்றி நட்புடன் பழகும் பிள்ளைகளிடம், ‘இவன் அல்லது இவள் எனக்குப் பொருத்தமானவளா? இவன் அல்லது இவளுடன் காலம் பூராக வாழ முடியுமா..? ‘ என்பது போன்ற பலவிடயங்களைச் சிந்தித்துப் பார்க்கும் மனப்பக்குவம் தாராளமாக இருப்பதைக் கண்கூடாகக் காண முடிகிறது.

ஆதலால் ஆண்-பெண் பால்பாகுபாடின்றிய நட்பு அவசியம். பெண்பிள்ளைகளும் உலகத்தைப் பார்க்க பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும். தவறுகள் நடவாதிருக்க உரிய வயதிலேயே உடல் ரீதியான, உணர்வுகள் சம்பந்தமான சில முக்கியவிடயங்களை பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்து அவர்கள் மனதில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்.

அதை விடுத்து பெண்பிள்ளைகளை ஆண்களுடன் பழகவிடாது வீட்டுக்குள் வைத்து வளர்ப்பதுதான் சரியென நினைத்து பிள்ளைகளையும் மனரீதியாக வதைத்து, பெற்றோர்கள் தம்மையும் தாமே வதைத்துக் கொண்டு “நெருப்பைக் கட்டிக்கொண்டு வாழ்கின்றோம்“ என்று சொல்வது அநாவசியச் செயலே.

-சந்திரவதனா
1999

  • ஐபிசி தமிழ் – வாலிபவட்டம் (11.07.1999)
  • ஈழமுரசு – பாரிஸ் (ஆடி 13-19, 2000)
  • செம்பருத்தி – மலேசியா, இதழ்-7 (ஆவணி, 2002)
  • வடலி – லண்டன் (பங்குனி, 2003)
  • வெற்றிமணி (தை, 2007)
  • நாளைய பெண்கள் சுயமாக வாழ… (June, 2019 நூலகத்தில்)

About சந்திரவதனா செல்வகுமாரன்

View all posts by சந்திரவதனா செல்வகுமாரன் →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *