ஈழத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு ஊடகவியலாளருக்கு யேர்மனியில் அதி உயர் விருது கிடைத்திருக்கிறது!

துமிலன் செல்வகுமாரன் ஈழத்தில் இருந்து தனது நான்காவது வயதில் யேர்மனிக்கு இடம் பெயர்ந்தவர். கணினித்துறையில் தனது தொழில்சார் கல்வியை முடித்திருந்தாலும், எழுதுவதில் உள்ள ஆர்வத்தால் பத்திரிகைத் துறைக்குள் நுழைந்து நிருபராக, புகைப்படக் கலைஞராக ஆரம்பித்து இன்று ஒரு பத்திரிகையின் ஆசிரியராகவும், எழுத்தாளராகவும்  செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்.

Thumilan Selvakumaran

வெளிநாட்டவர்களுக்கு எதிராகச் செயற்படும் NSU என்ற திரைமறைவு அமைப்பின் கொலைகள் மற்றும் செயற்பாடுகளைப் பற்றிய   Geheimsache NSU என்ற புத்தகத்தை இவர் ஒன்பது எழுத்தாளர்களுடன் இணைந்தும் Ende der Aufklärung: Die offene Wunde NSU என்ற புத்தகத்தை இரு எழுத்தாளர்களுடன் இணைந்தும் யேர்மனிய மொழியில் இவர் எழுதியுள்ளார்.

Thumilan Selvakumaran (Photo: Ufuk Arslan)

2023இல் யேர்மனி-ஸ்வேபிஸ் ஹால் (Schwäbisch Hall) நகரில் நடந்த நான்கு விதவைகளின் தொடர் கொலைகளை ஆராய்ந்து பொலீஸாரின் கவனக்குறைவையும், அசட்டையீனத்தையும்  பத்திரிகையில் எழுதி, துமிலன் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

3335f5c9-9a34-4bff-8a34-61abbc53a9b7
Thumilan Selvakumaran

அதனுடைய சாராம்சம் கீழே இருக்கிறது.

வீட்டின் வரவேற்பறையின் நடைபாதையில்,  நிலவிரிப்பின் கீழ் பெரிய அளவில் உறைந்திருந்த இரத்தத்தின் அடையாளம், அறுந்து தொங்கிக் கொண்டிருந்த  தொலைபேசியின் வயர், வரவேற்பறையை ஒட்டி இருந்த சமையலறையில் தலையில் காயத்துடன்  இறந்த படி, 86 வயதான Edith Lang என்ற மூதாட்டி  தரையில் கிடந்த  விதம் என்பன அங்கே ஒரு வன்முறை நிகழ்ந்திருந்தது  என்பதைத் துல்லியமாகக் காட்டின. அத்தோடு Edith Lang இன் கைப்பை மற்றும் பணப்பை இரண்டும் திறந்தபடி வெறுமையாகக் காணப்பட்டன. ஆனால் காவல்துறையினரோ அதை ஒரு விபத்து மரணம் என்று அறிவித்து விட்டு அடுத்த வேலைக்குப் போய்விட்டார்கள். பொதுமக்களும் அந்த மரணத்தை பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை . Suedwest Presse-ஐச் சேர்ந்த நிருபரான துமிலன்  இதைப்பற்றி ஆய்வு செய்து பத்திரிகையில் எழுதிய பின்னரே Edith Lang என்ற மூதாட்டியின் மரணம், கொலை என்றும் அது தொடர்பான விபரங்களும் வெளிச்சத்துக்கு வந்தன. அதன்பின்னரே காவல்துறைத் தலைவர் தங்கள் தவறுக்காக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

“ஸ்வேபிஸ் ஹாலின் விதவைக் கொலைகள்” பற்றிய துமிலனது எழுத்துக்களை பிரதிநிதித்துவப்படுத்தும்,  “குருடாகப்  பறந்து கொண்டிருக்கும் காவற்துறை அரச ஊழியர்கள்” (Polizeibeamte im Blindflug) என்ற கட்டுரைக்கு ஜெர்மனியின் மிகவும் மதிப்புமிக்க பத்திரிகை பரிசுகளில் ஒன்றான Stern Award  12.06.2024, புதன்கிழமை மாலை Hamburg நகரில் அவருக்கு வழங்கப்பட்டது. மேலும்  தைரியமாக ஆராய்ந்து மேற்கொண்ட  அவரது செயற்பாடுகளுக்காக நடுவர் மன்றம் அவரைப் பாராட்டியும் இருக்கிறது.

Stern Award ஐப் பெற்றுக் கொண்ட துமிலன் செல்வகுமாரன், “நான் பொலிஸ் துறையின்  மேல் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன், இருப்பினும் ஸ்வேபிஸ் ஹாலில்,  நடந்த தொடர் கொலைகளை பொலீஸ் புலனாய்வாளர்கள் சரியான முறையில் கையாளவில்லை” என்ற வருத்தத்தை விழா மேடையில் தெரிவித்தார். 

116a1350-4e04-4891-a516-53e2e4d66116

நூறு ஊடகங்களிடம் இருந்து கிடைக்கப் பெற்ற 460 ஆக்கங்கள் Stern Awardக்காக ஆய்வு செய்யப்பட்டன. 48 பேர் கொண்ட நடுவர் குழு, விருது குறித்து முடிவை எடுத்திருந்தது.

Stern சஞ்சிகை  இப்போது RTL Deutschland நிறுவனத்துக்கு சொந்தமானதாகும்.

(துமிலன் செல்வகுமாரன் தந்த படங்கள், தகவல்களை வைத்தே ‘புதனும் புதிரும்’ என்று அந்தத் தொடர் கொலைகள் பற்றிய விபரங்களை யாழ் இணையத்தின்  26 அகவை சுய ஆக்கங்கள்   நான் எழுதியிருந்தேன்)

-கவி அருணாசலம்
Quelle: Yarl.com

About கவி அருணாசலம்

View all posts by கவி அருணாசலம் →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *